கிளிநொச்சியில் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

மணல் விநியோக விடயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசியம் கருதி வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை அனுமதி வழங்கப்பட்ட வகையில் மணல் விநியோகம் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(26.09) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானத்தை அமைச்சர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் விநியோகம் துறைசார் தரப்பினரின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.

மாவட்ட அரச அதிபர் . றூபவதி கேதீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் கடத்தல், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று முடிவுகளும் எடுக்கப்பட்டன.

அத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை அமுற்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பயன்பாடு, கசிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,
மற்றும் விவசாயம், நீர்வழங்கல், சுகாதாரம், உள்ளூராட்சி, கூட்டுறவு, வாழ்வாதாரம், மீன்பிடி, காணி, கால்நடை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விளையாட்டு உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version