மன்னாரில் நீதித்துறைக்கு நீதி கோரி போராட்டம்

நாட்டில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக மன்னார் சிவில் சமூக அமைப்புக்கள், மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று(03.10) காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும் இந்தப் போராட்டத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.

மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையில் தொடர்ச்சியாக சட்டத்துறை மற்றும் நீதித்துறை எதிர்கொண்டு வரும் அழுத்தங்கள் மற்றும் சவால்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஒவ்வொரு பிரச்சினையின் போதும் அரசாங்கம் அமைக்கும் விசாரணைக் குழுக்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை ஒன்றே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி, நீதித்துறையின் சுயாதீனத்தை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி விரைவில் மன்னாரில் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, மன்னார் நகரசபை முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை முன்னாள் உப தலைவர் ஜான்சன், சிவில் சமூக அமைப்பினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னாள் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version