இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
இந்தியாவின் இராமநாதபுரத்தை சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு 61 இலங்கையர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து ஏனைய நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்ப முயற்சித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் இம்ரான் கான் மனித கடத்தல் மட்டுமின்றி பல குற்றங்களுக்காகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் எனவும், 2021 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஈசான் என்ற நபருடன் இனைந்து மேலும் பலரை கனடாவில் சட்டப்பூர்வ வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றியுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
மேலும் பல இலங்கையர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.