ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சமகால நிலைவரம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன்,மலையகத்துக்கான வீட்டுத் திட்டம், மலையக சமூக மேம்பாடு என்பன பற்றியும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, மலையக கல்வி மேம்பாடு பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான உரிமைகள், பெண்களின் சுகாதார பாதுகாப்பு, சிறார் மற்றும் மகளீருக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள், சிறுவர் தொழிலாளிகள் உருவாக்கப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் சுத்தமான குடிநீரும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கை அடைவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொது தனியார் கூட்டாண்மை மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி, ஸ்மாட் தொழில்நுட்பம் என்பவற்றை நீர்வழங்கல் துறைக்கு பயன்படுத்தி அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கபட்டுள்ளது.