வரவு செலவு திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!

2024ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடாத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் 7 ஆயிரத்து 833 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அரச சேவை செலவீனங்களுக்;காக மூவாயிரத்து 861 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
2023ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024ம் நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

2024ம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை நிதியமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 13ம் திகதி நாடாளுமன்றில் முன்வைத்தார்.

இதனையடுத்து வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்பும் நடாத்தப்பட்டது.

இதன்போது 2ம் வாசிப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து 3ம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி முதல் ஆரம்பமானது.

இதற்கமைய 19 வது நாளான இன்று நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதுடன் அதன் நிறைவில் வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version