விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசிய வலைப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இடையே சந்திப்பு..!

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவுக்கும் அடுத்த ஆசிய சம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சி பெற்று வரும் தேசிய வலைப்பந்தாட்ட அணியின் வீரர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது.

பயிற்சி நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் போட்டிகளுக்கான அணியை தயார்படுத்துவது குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.

அணிக்கு தேவையான வசதிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கொழும்பு 07, விளையாட்டு விடுதிக்கு முன்பாக உள்ள வலைப்பந்தாட்ட மைதானத்தின் மைதானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், வலைப்பந்தாட்ட மைதானத்தினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், சுகததாச உள்ளக விளையாட்டு மண்டபத்தை பயிற்சி நடவடிக்கைகளுக்காக இலவசமாக வழங்குவது தொடர்பில் அதன் தலைவருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

பயிற்சியை முறைப்படுத்தவும் சர்வதேச அனுபவத்தைப் பெறவும் தேசிய வலைப்பந்தாட்ட அணியை வெளிநாட்டுப் போட்டிகளுக்கு வழிநடத்தவும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டு அணிகளை இலங்கைக்கு வரவழைத்து போட்டிகளை நடத்தவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இம்முறை, ஆசிய மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி திருமதி விக்டோரியா லக்ஷ்மி மற்றும் ஏனைய அதிகாரிகள், தேசிய அணியை முன்கூட்டியே அழைத்து அவர்களின் தேவைகள், குறைபாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தமைக்காக இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவிற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகர் ஹரிஷ் ரவீந்திரன், ஒருங்கிணைப்பு செயலாளர் சாமர தண்டநாராயணா, ஆசிய மற்றும் இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோரியா லட்சுமி, தேசிய அணி பயிற்றுவிப்பாளர் தீபி சேனல் பிரசாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version