அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான நிபந்தனைகள் கடுமையாக காணப்பட்டமையினால் கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்கள் இந்த முறை விண்ணப்பிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.