டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு நாளை…

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடுஒன்றினை நாளை(26) கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. 

சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. 

முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. 

அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டினை, https://www.youtube.com/watch?v=0mfxUibO3-g என்ற முகவரியில் நாளை(26) காலை 09.30 மணி முதல் நேரலையாக பார்வையிட முடியும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version