2 ஓட்டங்களில் வெற்றியை தவற விட்ட பஞ்சாப் அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் இன்று(09) இந்த போட்டி நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

ஹைதராபாத் அணி சார்பில் நிதிஷ் ரெட்டி 64 ஓட்டங்களையும், அப்துல் சமாத் 12 பந்துகளில் 25 ஓட்டங்களையும் மற்றும் சபாஷ் அஹமட் ஆட்டமிழக்காமல் 7 பந்துகளில் 14 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், சாம் கரன் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் மற்றும் ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.   

183 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி போட்டியின் இறுதி பந்து வரை முயற்சித்த போதும், 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

பஞ்சாப் அணி சார்பில் சஷாங் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 46 மற்றும் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

மேலும், சாம் கரன் 29 ஓட்டங்களையும், ராசா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் மற்றும் பெட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் ரெட்டி, ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் நிதிஷ் ரெட்டி தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 6 இடத்திலும் காணப்படுகின்றது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(10) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

ஜய்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version