ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு 

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது.

இந்நிலையில், தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் மூன்று உப குழுக்களின் அறிக்கைகளைப் பெற்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் மாதவ தேவசுரேந்திர மேலும் தெரிவித்துள்ளார். 

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கபட்டுள்ளமை  சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version