அவுஸ்திரேலியாவிற்கு கல்வி நடவடிக்கைகளுக்காக வருகைத் தரும் ஏனைய நாடுகளை சேர்ந்த மாணவர்கள், விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை அவுஸ்திரேலியா மீண்டும் அதிகரித்துள்ளது.
மேலும், ஏனைய நாடுகளிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு வருகைத் தரும் மாணவர்களினால் சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 10ம் திகதி முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 29,710 அவுஸ்திரேலிய டொலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஒக்டோபர் மாதம், இந்த தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டது.
சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவுஸ்திரேலியாவின் முன்னணி வருமானமாக அமைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டில் மாத்திரம் 36.4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.