க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்(WhatsApp) குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்புடைய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று(12.05) கைது செய்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி பரீட்சை கடந்த 9ம் திகதி நேர அட்டவணையின் படி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இருப்பினும், குறித்த ஆசிரியரால் அன்றைய தினமே காலை 9.11 மணியளவில் வாட்ஸ் அப்(WhatsApp) குரூப்களில் ஆங்கில மொழி வினாத்தாள் பகிரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாட்ஸ்அப் குரூப்களில் 1,025 உறுப்பினர்கள் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று(12.05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுடிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.