உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு புதிய குழு நியமனம் 

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையிலான இந்தக் குழுவில், சக உறுப்பினர்களாக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரநிலை அதிகாரியான கே.என.கே. சோமரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷேன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இந்த விசாரணைக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி ஆலோசகர் சாரதாஞ்சலி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS), தேசிய புலனாய்வு பிரதானி(CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் எவை? அதற்கு அமைவாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

வவுணத்தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் எல்.டீ.டீ.ஈ அமைப்பினரால் கொல்லப்பட்டனர் என்பதை இராணுவ புலனாய்வு சபை (DMI), குற்றப் புலனாய்வு பிரிவு (CID) என்பன நான்கு மாதங்களாக நம்பியிருந்தமைக்கான காரணம் என்னவென்றும், மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாராணைகளில் தெரியவந்த தகவல்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

2019 ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை அல்லது அது தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுக்களினால் 2021 ஜனவரி 31ம் திகதி வழங்கப்பட்ட இறுதி அறிக்கையின் ஊடாக 2019 ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்படவிருந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவு (SIS), தேசிய புலனாய்வுப் பிரதானி (CNI)மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வுப் பிரிவினால் முழுமையான முன்னோடி அறிக்கையொன்று வழங்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2018 ஆண்டு நவம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு அண்மைய காலப்பகுதியில் வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பணியகம், குற்றப் புலனாய்வு பிரிவு என்பன அறிந்துகொண்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அதில் எல்.டீ.டீ.ஈ அமைப்புக்கு தொடர்பிருப்பதாக நம்பப்பட்டது. இருப்பினும் மேற்படி சம்பவத்திற்கு ஆறு மாதங்களுக்கு பின்னர் இராணுவ புலனாய்வு பணியகம் இதில் தேசிய தவூஹீத் ஜமாத்(NTJ) அமைப்புக்கு தொடர்பிருப்பதாக அறிந்துகொண்டது.

2019 ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடல் மற்றும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு 2021 ஜனவரி 31ம் திகதி இறுதி அடங்கிய இறுவட்டு ஒன்றை விசாரணை ஆணைக்குழுவிடம் வழங்கியிருப்பதோடு, அது தொடர்பில் எந்தவொரு அதிகாரியிடமும் விசாரணை நடத்தும் அதிகாரத்தை புதிய விசாரணைக் குழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார். அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னதாக புதிய குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply