மடு மாதாவின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்
நேற்று (27.06) காலை மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்
பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை
கிறிஸ்து நாயகம் அடிகளார்,மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரதேச செயலாளர்கள்,
திணைக்களத் தலைவர்கள்,பொலிஸ், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போக்குவரத்து,குடிநீர்,மின்சாரம் பாதுகாப்பு,தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பமானதைத் தொடர்ந்து நவநாள்
திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்
எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை
கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கவுள்ளனர்.
இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடு அன்னையின்
ஆசி பெற வருகை தரவுள்ளமையினால் சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் தெரிவித்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்