ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என 2019ம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருப்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் முயற்சித்து வருவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று(03.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குற்றம் சுமத்தியுள்ளார்.
2019ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்த போது, அரசியலமைப்பின் 19வது திருத்ததிற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ளாமல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் மற்றும் தந்திரோபாயங்களை தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.