மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னாரில் இடம் பெற்றது.
மலையக மக்களின் 200 ஆவது வருடத்தையொட்டி வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் புனித லோரன்சியார் ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மாண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவு அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட மலையக மக்கள் தலைமன்னாருக்கு வருகை தந்து திருப்பலியில் கலந்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மலையக மக்கள், மற்றும் தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்,ஊர்வலமாக சென்று குறித்த கிராமத்தின் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மலையக மக்களின் ஞாபகார்த்த நினைவு ஸ்தூபி இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது மலையக மக்கள் , மலையக மக்கள் பிரதிநிதிகள், கிராமவாசிகள், கிராமத்தின் மதகுரு. அருட்சகோதரி மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் உட்பட பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் நகர பகுதிக்கு விஜயம் செய்து கடந்து வந்த பாதை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு,மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் போது ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நற்சான்று பத்திரம் வழங்கி வைத்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்