ஜனாதிபதியைப் பற்றி நல்லெண்ணமே உள்ளது – ரிஷாட் பதியுதின்

ஜனாதிபதியைப் பற்றி நல்லெண்ணமே உள்ளது - ரிஷாட் பதியுதின்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் பொதுமக்களிடம் கோரினார்.

முசலி, கொண்டைச்சி கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று (19.08) நடாத்திய கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தலில் புத்தி சாதுர்யமாக எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. பிரதானமாக நால்வரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நாம் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குகிறோம். காரணம் எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்பதற்காக.

எங்கள் ஜனாஸாக்களை எரிக்கின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு அமைச்சரவையில் இருந்தவர்கள், அதற்கு பக்கபலமாக இருந்த 144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எமது சமூகத்தை சேர்ந்த 06 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.

எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அந்தக் கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுதக் கலாச்சாரத்தை தூது விட்டவர்கள், தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள், அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள்

இவ்வாறானவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரைப் பற்றிய நல்லெண்ணமே இருக்கிறது.

ஆனால் அவருடன் சேர்ந்துள்ள கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்த ,கொடூரமாக செயற்பட்ட, ஜனாஸாக்களை எரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியுடன் கை கோர்த்திருந்தவர்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். இதனாலேயே ஜனாதிபதிக்கு எமது ஆதரவை வழங்கவில்லை.

அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள். அரசாங்கம் என்பது மக்களின் பணம். அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினாலேயே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.

நாட்டிலே மீண்டும் இனவாதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குகிறோம்.

நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேமதாசவுடனேயே கைகோர்த்துள்ளனர்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். இனவாதத்திற்கு எதிரான சமூகப் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கறைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றது.

அந்த அணியைப் பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும்,முஸ்ஸீம்களுக்கும்,மலையகத் தமிழர்களுக்கும் இருக்கின்றது. இந்த மூன்று சமூகத்தினரின் வாக்குகளும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றன.

எனவே சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளும் வழிவகுக்கும்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார். மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம். எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

இந்நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்,ஜயதிலக, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதின், முன்னாள் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்,முஜாகிர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதோடு பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version