
உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கியப் புள்ளியாக திகழ்வதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று (11/09) ஏற்பாடு செய்யப்பட 2024 சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் நாம் பெருமை அடைகின்றோம். எமக்கு நீண்டகால வரலாற்றை கொண்ட கலாசாரம் காணப்படுகிறது.
இந்து மற்றும் பௌதம் தொடர்பான மிக முக்கிய மெய்யியல் வரலாற்று சிறப்பை கொண்டதே எமது பிராந்தியம். அந்த மெய்யியல் தத்துவங்கள் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளன.
உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கிய புள்ளியாக திகழ்கிறது. வடக்கில் திரைப்பட துறை மெதுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வை நடத்துகின்றமை காலத்திற்கு பொருத்தமானதாக காணப்படுகிறது. இங்குள்ள திரைப்பட துறையினருக்கு புத்துணர்ச்சி வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக இது அமைய வேண்டும். இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி” என கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான நேபாள உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.