இலங்கை அணியின் வளர்ச்சிப் பாதை ஆரம்பம் – தொடரை கைப்பற்றியது

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.
இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு பின் மத்திய வரிசை வீரர்கள் ஓரளவு கைகொடுத்தமையினால் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. சரித் அசலங்க 47(71) ஓட்டங்களையும், தனஞ்செய டி சில்வா 31(44) ஓட்டங்களையும், துஸ்மாந்த சமீர 29 ( 39) ஓட்டங்களையும் பெற்றனர். இந்தப் போட்டியில் மினுத் பானுக்கவிற்கு பதிலாக சேர்த்துக்கொள்ளப்பட்ட டினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். கமிந்து மென்டிஸ் நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடிய போதும் 16 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்களையும், ஜோர்ஜ் லின்டே, ரப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹெய்ன்ரிச் க்ளாஸன் 22 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லின்டே 18 ஓட்டங்களையும் பெற்றனர். தன்னுடைய முதற் போட்டியில் விளையாடிய மகேஷ் தீக்ஸன முதல் பந்திலேயே விக்கெட்டினை கைப்பற்றினார். அவர் இந்தப் போட்டியில் 04 விக்கெட்களை கைப்பற்றினார். வனிது ஹசராங்க 02விக்கெட்களையும், துஸ்மாந்த சமீர 02 விக்கெட்களையும், கைப்பற்றினார்கள்.
பலமான தென்னாபிரிக்கா அணியுடனான இந்த வெற்றி இலங்கை அணிக்கு மிகவும் பெரிய பலத்தையும், உத்வேகத்தையும் நிச்சயம் வழங்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிப்பாதை ஆரம்பித்துவிட்டது. இரு அணிகளுக்குமிடையிலான 20-20 போட்டி தொடர் இம்மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 12,14 ஆம் திகதிகளில் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கை அணியின் வளர்ச்சிப் பாதை ஆரம்பம் - தொடரை கைப்பற்றியது

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version