இன்றைய வாநிலை..!

இன்றைய வாநிலை..!

அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது.

அது நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்மித்ததாக தமிழ்நாடு கரையை நோக்கி அது நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்‌ என‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version