ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.
இதை யார் செய்தார்கள், எந்த நோக்கத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.