எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (12.03) புதன்கிழமை மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இதன்போது,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, இளைஞர் மற்றும் விளையாட்டு விவாகர அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனின் பிரத்தியேக செயலாளருமான அப்துல் மொகமட் சாஜித்,
“கடந்த காலங்களிலே மக்கள் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியான எமது அரசாங்கத்தை தெரிவு செய்திருந்தார்கள்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தை, சுற்றுலா, மீன்பிடி மற்றும் கைத்தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கு எங்களுடைய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை செயற்படுத்துவதற்கும் சரியான முறையில் நிர்வகிப்பதற்கும், எமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் அவசியம் தேவை.
ஆகவே மக்கள் இதை நன்கு உணர்ந்து எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியை அமோக வெற்றி பெறச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்