கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை – ஒருதலைப்பட்சமானது என்கிறது அரசாங்கம்

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இலங்கையில இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக, ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்தது.

இவர்களை தவிர LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது.

குறித்த நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டிற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என ஐக்கிய இராச்சியத்தின் இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version