இலங்கைக்கு கைகொடுக்கும் கமிந்துவின் போராட்டம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சிற்க்காக துடுப்பாடி வருகிறது. நான்காம் நாளின் மதிய போசன இடைவேளை வரை இலங்கை அணி 124 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 465 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி பங்களாதேஷ் அணியிலும் பார்க்க 30 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்படுகிறது.

நேற்றைய நாள் நிறைவடையும் வேளையில் தடுமாற்றத்தை சந்தித்த இலங்கை அணி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று போட்டி ஆரம்பித்து சிறிய வேளையில் தனஞ்சய டி சில்வா 19 ஓட்டங்களுடனும், குஷல் மென்டிஸ் 05 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் கமிந்து மென்டிஸ் சிறப்பாக துடுப்பாடி போராட்டம் மிக்க ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளார். ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றுள்ளார். 9 இன்னிங்ஸிற்கு பிறகு 50 ஓட்ட பெறுதியை கமிந்து கடந்துள்ளார். அவருக்கு சிறந்த இணையாட்டம் ஒன்றை மிலான் ரத்நாயக்க வழங்கி வருகிறார். அவர் 38 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பத்தும் நிஸ்ஸங்க மிக அபாரமாக துடுப்பாடி இரட்டை சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்த வேளையில் 187 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மூன்றாவது சதத்தை 18 ஆவது போட்டியில் பெற்றுள்ளார். இதுவே அவரின் கூடுதலான ஓட்டங்கள் ஆகும். இன்று 1000 ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் பத்தும் நிஸ்ஸங்க கடந்துள்ளார். தனது இறுதிப் போட்டியில் விளையாடும் அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மிக சிறப்பாக நேர்த்தியாக பந்துகளை எதிர்கொண்டு வேகமாக துடுப்பாடியவர் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அஞ்சலோ மத்தியூஸ் ஆடுகளத்துக்கு துடுப்பாட்ட வந்த வேளையில் பங்களாதேஷ் வீரர்கள் மற்றும் நடுவர்கள் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர்.

வேகமான ஆரம்பத்தை வழங்கிய லஹிரு உதார 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டினேஷ் சந்திமால் 54 ஓட்டங்க்ளுடன் ஆட்டமிழந்தார். பத்தும் நிஸ்ஸங்க, டினேஷ் சந்திமால் ஜோடி 157 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். கமிந்து மென்டிஸ் 37 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பாடி வருகின்றனர். பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் ஹசன், ஹசன் மஹமூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய அதேவேளை, டைஜூல் இஸ்லாம், மொமினுள் ஹக், ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி பலமான நிலையில் தமது இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. இரண்டாம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 151 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 484 ஓட்டங்களை பெற்ற நிலையில் நிறைவு செய்தது. இன்று காலை 11 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி 153.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாகிய நஜிமுல் ஹொசைன் சான்டோ 148 ஓட்டங்களை பெற்று இன்று காலை ஆட்டமிழந்தார். இது அவரின் ஆறாவது டெஸ்ட் சதமாகும். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய முஸ்பிகீர் ரஹீம் 163 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 12 ஆவது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இது இலங்கை அணிக்கெதிரான நான்காவது சதமாகும். இலங்கை அணிக்கெதிராகவே முதல் இரட்டை சதத்தை பெற்றுக்கொண்டார் ரஹீம். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 364 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். லிட்டோன் டாஸ் 90 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவர் வேகமாக துடுப்பாடி பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஐந்தாவது விக்கெட் இணைப்பாடமாக ரஹீம்-டாஸ் ஜோடி 149 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், மத்திய வரிசையில் சிறந்த மீள்வருகையை ஏற்படுத்தி பலமான நிலைக்கு சென்றனர். முதல் நாளில் மூன்று விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் நேற்று 6 விக்கெட்களை பங்களாதேஷ் அணி இழந்து. குறிப்பாக இரண்டாம் நாள் நிறைவடைவதற்கு முன்னதாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தமை அவர்களுக்கு பின்னடைவைஏற்படுத்தியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். தனது முதற் போட்டியில் விளையாடும் தரிந்து ரத்நாயக்க மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். மிலான் ரத்நாயக்க மூன்று விக்கெட்களை கைபபற்றிக்கொண்டார். இணைப்பாடங்கள் முறியடிக்கப்பட்டு நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இலங்கை அணியின் களத்தடுப்பு போதியளவு சிறப்பாக அமையாமையும் பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு ஒரு காரணமாகும்.

இலங்கை அணியின் தற்போதைய ஓட்ட நிலவரதத்தின் படி வெற்றியை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போராட்டத்துடன் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி முன்னணி ஒன்றை பெற்றுக்கொண்டு, பங்களாதேஷ் அணியின் விக்கெட்களை வேகமாக கைப்பற்றினால் இலங்கை அணி பக்கமாக வாய்ப்புகள் ஏற்படும். பங்களாதேஷ் பக்கமாக போட்டி செல்லும் வட்டப்புகள் குறைவடைந்து வருகிறது. சமநிலை வாய்ப்புகள் இன்னமும் காணப்படுகின்றன. மழை குறுக்கிடாவிட்டால், சமநிலை வாய்ப்புகள் மிகவும் குறைவே.

இலங்கைக்கு கைகொடுக்கும் கமிந்துவின் போராட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version