அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு!

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (06.02) நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ உள்ள ஜனநாயக உரிமையின் மீது எவ்விதத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

அடக்குமுறை என்பதை வெறும் சொல்லாக மாத்திரம் உச்சரிக்காது, கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்ட அல்லது அடக்குமுறைக்கு உள்ளான நபர்கள் எவராவது இருப்பின் அவர்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பியுங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன, ஆயினும் அதற்கு எதிராக எவ்வித அடக்குமுறைகளையும் பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய அனர்த்த நிலையின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீதிகள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதற்கு இந்தச் சட்டப் பின்னணி தேவைப்படுகிறது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பு (புகையிரதப் பாதைகள் உட்பட) மற்றும் பாடசாலைக் கட்டடங்களை மீண்டும் சீரமைக்கும்போது, அவற்றை முன்பு இருந்த நிலைக்கு மாத்திரம் கொண்டு வராமல், எதிர்கால அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய வகையில் விஞ்ஞான ரீதியான முறையின்கீழ் நவீனமயப்படுத்துவதற்கு முப்படையினரை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இத்தகைய தேவைகளுக்காகவே நாம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம்.

அனர்த்த நிவாரணங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதியினால் விசேட செயலணி (Task Force) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இந்த மாதம் எமக்குக் கிடைக்கும். அதற்கமைய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல், தற்போதும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் குறித்துக் கண்டறிந்து, அவர்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகையினால், அரசியல் இலாபத்திற்காக “அடக்குமுறை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version