பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலான் கொடிதுவக்கு ஆகியோரையும் அதிகாரிகளையும் நேற்று (08.09) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்திருந்தார்.


பராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்து சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டியுள்ளதாக குறிப்பிட்டு பிரதமர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


வரலாற்றை புதுப்பித்து எழுதிய இந்த வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் வீர வீராங்கனைகளின் பயிற்சிக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.


ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் என்ற இலக்கை பதிவுசெய்து புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கம் வென்றார்.


F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 என்ற இலக்கை பதிவுசெய்து சமித துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றார்.


இந்த வெற்றிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பராலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களான தினேஷ் பிரியந்த மற்றும் சமித துலான் ஆகியோர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.


இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்நாட்டின் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் இதுபோன்ற வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேர்னல் தீபால் ஹேரத், செயலாளர் பந்துல குணவர்தன, ஈட்டி எறிதல் போட்டியின் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிசாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version