அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பில்லை – தொழிற்சங்க பிரதிநிதிகள்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். அத்தோடு அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அவர்கள் உறுதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03.05) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கும் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பில் “குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை” என பலர் தெரிவித்துள்ளதோடு தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உத்தேசித்துள்ள வேலைநிறுத்தம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல என்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தவும், மக்களை ஒடுக்குவதும் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமாகும். அதனால் நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல ஊழியர்களினதும் கடமை மற்றும் பொறுப்பு என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளைக் கையாண்டு, அரசியல் பிளவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி நடைபெற்ற கூட்டத்தில் விளக்கியுள்ளார். வேலை நிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் ஆகும். இதை உணர்ந்து, நிறுவனங்கள் வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது.
கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற வேலைநிறுத்தத்தை பொருட்படுத்தாமல் தமது கடமைகளை ஆற்றிய தொழிலாளர்களுக்குத் தமது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி , தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்களான திலும் அமுனுகம, மொஹான் டி சில்வா, கஞ்சன விஜேசேகர, பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோருடன், போக்குவரத்து, மின்சாரம், துறைமுகம் மற்றும் கப்பற்துறை, வலுசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்

அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பில்லை - தொழிற்சங்க பிரதிநிதிகள்

Social Share

Leave a Reply