கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் நற்செய்தி சர்வதேச தேவாலயம்’ எனும் சபையின் தலைவரான மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன் சபைக்கு வருபவர்களிடம் குறித்த போதகர் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது,
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்களில் 21 பேரின் சடலங்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் பணிகளை தொடர்ந்து, மேலும் 26 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என கென்யாவின் மலின்டி பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளன.
விசாரணைகளுக்காகவும், தேடுதல் பணிகளுக்காகவும் 800 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.