சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள்-சஜித்!

கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ”ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய கர்தினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் வெளிநாட்டு விசாரணை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துகிறோம். இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது. ஆகவே  சர்வதேச விசாரணை தேவை.

கார்தினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம்.  அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருக்கிறது.

கார்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.  ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது.

சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள்.  கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல்,முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version