உண்மைகளைக் கண்டறிய அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு காரணம தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருப்பதால் தானா? என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (06.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என கூறி இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி தேசிய ஒற்றுமையை சிதைத்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை வெளிவராமல், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் காரணமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை நம் நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம் என்றும்,அந்த கொடூரத் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், இந்த காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான,வன்முறைத் தாக்குதலை அன்றும்,இன்றும், நாளையும் நாமும் முழு மக்களும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நமது நாட்டில் இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நியாயமான தேசிய விசாரணை நடைபெறவில்லை என்பதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும்,இந்த தாக்குதலில் உயிரிழந்த நம் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், தற்போதைய அரசாங்கம் கூட நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்துதான் நிறுவப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

இன்று தேசிய மட்டத்திலான விசாரணை முன்னெடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக உருவான அரசாங்கம் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என்றும்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது மறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவாத மற்றும் இனவாத தாக்குதல்களை நாம் மறக்க முடியாது என்றும், இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி தேசிய ஒருமைப்பாட்டைக் காட்டி அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களினால் பிராதன சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டனர் என்றும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை என்றாலும் சர்வதேச சமூகம் உண்மையை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்றும், இது தொடர்பாக தெரிவுக் குழு நியமிக்கப்படும் என்றும் பேசப்படுவதாகவும்,இது திருடனின் தாயாரிடம் மை பார்ப்பது போன்றாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த இரத்தவெறி கொண்ட அரசாங்கத்தால் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது, என்பதனால் நியாயமான சர்வதேச விசாரணை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version