”நான் உயிருடன் தான் இருக்கின்றேன்” – பூனம் பாண்டே

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, ‛‛ நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்த நோய்க்கு நான் பலியாகவில்லை” எனக்கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே(32) நேற்று (02.02) உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அவரது உறவினர்களும் இதனை சமூக வலைதளத்தில் உறுதிபடுத்தினர்.

இந்நிலையில், பூனம் பாண்டே ‛‛ நான் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்’ எனக்கூறி சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார், இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்டபடுத்தியுள்ளது.

குறித்த பதிவில், நான் உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு நான் இறக்கவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர். அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. மற்ற புற்றுநோய்களை போல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே. இதற்கு முன்கூட்டியே பரிசோதனை செய்வதுடன், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவே இறந்துவிட்டதாக கூறி பதிவிட்டேன். இறந்துவிட்டதாக கருதி பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வந்தனர்; அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” எனக்கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version