நாட்டின் வறுமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது – சஜித் 

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை உணவு பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு ஒன்றித்து உறவுகளை பேணுவதால் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வறுமை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது. நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமை, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர். நன்றாக இருந்த மக்களின் வாழ்வு சுருங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் சொல்லும் ஸ்திரத்தன்மை புதிய இயல்பு நிலையாக்கத்தால் நடந்துள்ளது. புதிய இயல்பு நிலையில் மக்களின் பிரச்சினைகள்  அதிகரித்துள்ளன, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் 2 இலட்சம் நுண்ரக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை  குறைத்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி ஸ்திரத்தன்மைக்கு செல்ல முடியும். மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ள புதிய இயல்பு நிலையால் நாட்டுக்கோ அல்லது 220 இலட்சம் மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதால், வறுமையை ஒழிப்பதற்கான தேசியத் திட்டமொன்று   உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு கல்விக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 139 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 03 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்ததாக எதிர்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர், 

” வறுமையை ஒழிக்கவும், மத நல்லிணக்கத்தை உருவாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் கல்வியானது பயன்படும். எந்த தீவிரவாதத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஒரு நாடாக, ஒரு தாயின் பிள்ளைகளாக நடுநிலை போக்கில் சமத்துவம் என்ற கொள்கையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும். எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் சமம். உயர்சாதி செல்வந்த குடிமக்கள் அல்லது தாழ்ந்த சாதாரண  குடிமக்கள் என்று 2 வகையான குடிமக்கள் இங்கு இல்லை. அரசியலமைப்பின் முன் நாம் அனைவரும் சமம். 

பாராளுமன்ற உறுப்பினர்களாக  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதை பாதுகாக்கவும், அதன் உரிமைக்காக குரல் கொடுக்கவும் முன்நின்றவர்கள், பாராளுமன்றத்தில் இருந்து நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்த பிற்பாடு, நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. பாராளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பாவையாக கருத்திற் கொள்ளப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம், நீதித்துறை என 3 பகுதிகள் உள்ளதால், எந்த ஒரு நிறுவனமும் மற்றொரு நிறுவனத்தை குறைமதிப்பிற்குட்படுத்ததாது, தடைகள்  மற்றும் சமன்பாடுகள் மூலம் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகின்றது. 

யுத்தத்தால் முல்லைத்தீவு பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. போருக்குப் பின்னர் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியாலும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை. தேர்தல்  காலத்தில்தான் வடக்கு கிழக்கை நினைவு கூர்கின்றனர். இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்படும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version