வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் ஐவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா குறித்த குழாமிலிருந்து நேற்று (06) விலகினார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஐவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதியரசர் எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார்.

அதன்பிறகு, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை மாதம் 30-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் சில நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழையான பகுதிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, மொழிபெயர்ப்பு பணிகளை விரைவில் நிறைவு செய்ய உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30 ஆம் திகதி அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அந்த தண்டனைகளிலிருந்து தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version