மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர கடிதமொன்றின் ஊடாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை செலுத்துவதற்கான பணம் எப்படி ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு குறித்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை எனவும் எனவே அதனை பகுதி பகுதியாக செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் தருமாறும் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 13ம் திகதி சுமார் 3 கோடி ரூபாய்(28 மில்லியன்) மைத்திரிபால சிறிசேனவினால் இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. 

எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென குறித்த இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே குறித்த பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் ஆராயுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version