இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக
யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை (18) 10 மணிக்கு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17)
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத பட்சத்தில்
நாடாளுமன்றத்தை முற்றைகையிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருவதாக தெரிவித்த
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் ,
இதனால் கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டியேற்படும் என
யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம்” என்றார்.
மேலும் இன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.