நாட்டில் ரூபாவுக்கும் டொலர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 273 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, மஹர, வத்தளை ஹுனுபிட்டிய எந்தரமுல்ல புனித செபஸ்டியன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெர்வித்த அவர்,
தென் மாகாண ஆளுநர் சட்டவிரோதமான அரசியல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார்
தேர்தலை நடத்தாமல் தடம் புரளும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுநரின் கடிதத்தின் மூலம், தமது அடிவருடிகளை நியமிக்கும் விளையாட்டு தென் மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு தவறிழைக்க வேண்டாம் என ஆளுநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வங்குரோத்தான ஒரு நாட்டிற்கு இதுபோன்ற வீணான திட்டங்களை செயல்படுத்த உரிமை இல்லை.
பாடசாலைகளில் குறைபாடுகள் அதிகம் இருக்கத்தக்க, பணத்தைப் பயன்படுத்தி, தேர்தல் நடத்தப்படாதுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமது சொந்த ஆதரவாளர்களுக்கு நியமணங்களை மேற்கொண்டு வரும் அநாகரீகமான செயற்திட்டத்தை நிறுத்துங்கள்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆளுநர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் நீதிமன்றில் சாட்சியமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஆளுநரின் நற்பெயருக்குரிய கௌரவத்தைப் பேணிக் கொண்டு, குறைந்த வளங்களை பாடசாலை பிள்ளைகளின் நலனுக்காக பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.