சிறுவர் உரிமைகளுக்கான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி செயலணி

UNICEF நம்பிக்கை கொள்ளும் வகையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவர்களிடம் முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

UNICEF அமைப்பின் பிரதானியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11.07) சந்தித்துள்ளார்.

பல வருடங்களாக தாம் பேசி நடைமுறைப்படுத்திய கொள்கைகளே இவை என யுனிசெப் பிரதிநிதிகளிடம்
தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 308 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு, மகா போதி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் சிறுவர்களின் உரிமைகளுக்கான தேசிய கொள்கையை உருவாக்குவோம். சிறுவர் உரிமைகள் குறித்து அவ்வப்போது பேசப்பட்டாலும் முறையான வேலைத்திட்டமொன்று
எமது நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை.

சிறுவர்களின் ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூகக் கொள்கைகள் மூலம் உருவாக்கப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான பதில்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் வகையில்,
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை தாபிப்போம். இதன் ஊடாக நாடு முழுவதும் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தி பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகங்களை மையமாக வைத்து, சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்போம்.
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து,
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றிலிருந்து சகலரையும் குறிப்பாக சிறுவர்களை விடுவிக்குமாறும், நாட்டின் எதிர்காலத்திற்கு பொறுப்பான சிறுவர்களை
பாதுகாக்குமாறும் இலங்கை மது ஒழிப்போர் சங்கத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுடன் நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் நடந்து கொள்வது போலவே பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள். பொற்றோர்கள் செய்வதையே பிள்ளைகளும் பின் தொடர்வார்கள். எனவே இது தொடர்பில்
கவனம் செலுத்தி நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

இன்றைய சமூகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பில்லாத நிலையை உணர்கின்றனர். சமூக பாதுகாப்பு இல்லாத நிலையையும் உணர்கின்றனர்.
இதன் காரணமாக சிறுவர்களை இலக்கு வைத்து சமூக பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுப்பட வேண்டிய தேவைப்பாடு இங்கு காணப்படுகின்றது.

இதுதான் முறைமையில் மாற்றம் என்பது, வழமையான சட்டகத்தை விட்டு வெளியே வந்து, புதிய வழிமுறைகள் மூலம் நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளே பயனடைந்து வருகின்றனர்.

கல்விக் கொள்கையை தேசியக் கொள்கையாக்கி, தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முதலம்சமாக மாற்றுவோம். இதன் கீழ் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மார்ட் பாடசாலைகளாக
மாற்றுவோம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version